top of page

அன்னை மீனாட்சி கோயில்கொண்ட மதுரை!


மீனாட்சி அரசாளும் மதுரை அன்று

****மீன்கொடியோன் தலைநகரா யிருந்த வூராம் !

தேனான வைகைநதி பாயு மூராம்

***தெய்வீக சிந்தனையை வளர்க்கு மூராம் !

மேனாட்டார் விழியுயர்த்தி வியந்து நோக்கும்

****மேன்மைமிகு கலைகளிலே விஞ்சு மூராம் !

நான்மாடக் கூடலெனப் போற்றப் பெற்ற

***நற்றவத்தோர் வாழ்ந்ததிந்த ஊரின் பேறாம் !


பேறுகளும் மிகுந்தவிந்த மதுரை மண்ணே

***பிறைசூடி விளையாடல் நிகழ்ந்த வூராம் !

நீறுபூசி சுந்தரேசர் மீனாள் கூடி

****நெஞ்சினிக்கக் குடிகொண்ட ஆல வாயாம் !

நாறுமலர் மல்லிகையே பெருமை சொல்லும்

***நற்றமிழின் மண்வாசம் சொக்க வைக்கும் !

வேறுபல மகிமைகளும் சொல்ல வந்தேன்

***விருத்தங்கள் வாசிக்கத் தெரியும் சேதி !


சேதிகேளீர்! கடம்பமரம் மிகுந்த ஊராம்

***தேன்தமிழைச் சங்கங்கள் வளர்த்த ஊராம் !

வீதிகளும் தமிழ்மாதப் பெயரால் மின்னும்

***வெள்ளிச்ச பையிலீசன் காலை மாற்றிப்

பாதிமதி சூடியாடும் அழகு கோலம்

***பார்ப்போரைப் பரவசமும் கொள்ளச் செய்யும் !

நீதிநெறி வழுவாமங் கம்மா ராணி

***நெஞ்சத்தில் வீரத்தோ டாண்ட ஊராம் !



ஊரினிலே மீனாட்சி யம்மன் கோயில்

***உலகத்தில் பிரசித்திப் பெற்ற கோயில்

பாரிலுயர் அதிசயமாய்ப் பார்க்கப் பட்டுப்

***பழம்பெருமை பேசிநிற்கும் எழிலின் உச்சம் !

நீரிருந்தும் மீனினமே குளத்தில் இல்லை

***நிசமிங்கே பொற்றாம ரைக்கு ளத்தில் !

பேரெழிலாய் ஆயிரங்கால் மண்ட பத்தில்

***பேர்சொல்லும் கண்காட்சி உள்ள திங்கே !


இங்குள்ள நாயக்கர் அரங்கந் தன்னில்

***எழிலான ஓவியங்கள் உள்ளம் அள்ளும் !

மங்காத அழகோடு பெரிய தூண்கள்

***மன்னவனின் கலைத்திறனைப் போற்றிச் சொல்லும் !

சங்கீத இசைத்தூண்கள் சந்தம் கொஞ்சும்

***சத்தத்தில் செவிகளிலே செந்தேன் பாயும் !

சிங்கார மாயொளியு மொலியு மிங்கே

***சிலிர்க்கவைக்கும் காட்சிகளும் நடக்கும் நித்தம் !.


நடைபெறும்வி ழாக்களுக்குப் பஞ்ச மில்லை

***நகரத்தின் விழாக்கோலம் அன்பின் எல்லை !

தடையின்றி நடந்தேறும் ஜல்லிக் கட்டும்

***தமிழினத்தின் வீரத்தை எடுத்துக் காட்டும் !

மடைதிறந்த வெள்ளமென மக்கள் கூட்டம்

***மகிழ்வுடனே அதைக்காண முட்டி மோதும் !

சடைத்திடாமல் விருந்தோம்பும் குணமே சொத்தாய்த்

***தமிழ்மாந்தர் மனத்தூறும் அன்பே முத்தாய் !


முத்தாக ஒளிசிந்தும் மதுரை தன்னில்

***முப்போதும் ஆன்மீக வாசம் வீசும் !

சித்திரையில் திருவிழாவும் பேத மின்றிச்

***சீரோடும் சிறப்போடும் நடக்கும் பாங்காய் !

எத்திக்கும் பக்திவெள்ளம் பெருகிப் பாய

***இருசமய ஒற்றுமையில் இன்பம் பொங்கும் !

வித்தாகி நல்லிணக்க மியல்பாய்ப் பூக்கும்

***வீண்வாதம் சங்கடங்கள் மறைந்தே செல்லும் !


செல்லுகின்ற சாலையெல்லாம் மக்கள் கூடிச்

***சீர்மிகுந்த அன்னைமணக் கோலம் கண்டு

எல்லையில்லா ஆனந்த மெங்கும் பொங்க

***இறைவியின் திருமணத்தில் பங்கு கொள்வர் !

பல்லாயி ரம்பெண்கள் தாலி நூலைப்

***பக்தியுடன் தாமாக மாற்றிக் கொள்ளப்

பல்லக்கில் சொக்கருட னிணைந்தே மீனாள்

***பவனிவரும் அழகினிலே பூக்கும் கண்கள் !



கள்ளழகர் வைகையிலே இறங்கும் கோலம்

***காண்பதற்கே விழிகளொரு கோடி வேண்டும் !

உள்ளமெலாம் பக்திரசம் நிறைந்து மின்னும்

***ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாம் இஃதே !

வெள்ளமெனத் திரண்டிருந்த மக்கள் நெஞ்சில்

***வித்தியாச மேதுமின்றிப் பகைமை நீங்கும் !

கள்ளமனம் கரைந்தங்குச் சுரக்கும் நேயம்

***கனிந்துருகிப் பரவசத்தில் உள்ளம் பூக்கும் !


பூப்போன்று மணம்வீசும் விருத்தம் பத்தும்

***புனிதமான மதுரைநகர் புகழைப் பாடும் !

கூப்பிட்ட வுடனன்னை ஓடி வந்தே

***கொஞ்சுமொழி யால்வருடி உள்ளம் வெல்வாள் !

தோப்புக்குள் இளங்காற்றாய்க் கருணை யோடு

***சுகராகம் மீட்டிடுவாள் மதுரை தன்னில் !

மாப்பிள்ளை விநாயகரே உமக்கு நன்றி

***மதுரைதனை எழுதவைத்தீர் தடங்க லின்றி !


17 views0 comments
bottom of page