top of page

" என் புள்ள பசி தாங்காது " - அம்மா கவிதை


எந்தப் பொய்

சொல்லியும்

அம்மாக்களை

ஏமாற்றிவிடமுடியும்

சாப்பிட்டு விட்டேன்

என்கிற

அந்த ஒரு பொய்யைத்தவிர


===================


அடுப்படியே

அம்மாவின்

அலுவலகம்

அன்பு மட்டுமே

எதிர்பார்க்கும் சம்பளம்

===================


அப்பா வாசம்

வெயில் வாசம்

அம்மா வாசம்

நிலா வாசம்

எமது வீடுகளின்

சமையலறையெங்கும்

நிலா வாசம்


===================



எமக்குக்

காய்ச்சல் வந்தால்

மருந்து தேவையில்லை

அடிக்கடி வந்து

தொட்டுப்பார்க்கும்

அம்மாவின் கையே

போதுமானது


===================


இவ்வளவு

வயதாகியும்

புதுச்சட்டைக்கு

மஞ்சள்வைத்து

வருபவனைக்

கேலி செய்யும்

நண்பர்களே

அது,

அவன் வைத்த

மஞ்சள் அல்ல

அவன்,

அம்மா வைத்த

மஞ்சள்


===================


பிள்ளைகள்

ஊரிலிருந்து

கொண்டு வரும்

பயணப்பையில்

இந்த அம்மாக்கள்

எதிர்பார்ப்பது

இன்னுங்கொஞ்சம்

அழுக்குத்துணிகளை


===================


மகனுக்கான

அப்பாவின்

கோபத்திற்கெல்லாம்

அம்மாவின்

முதுகுதான்

கிழக்கு


===================


டைப்பாய்டு வந்து

படுத்த அம்மாவுக்கு

சமைக்க முடியவில்லையே

என்கிற கவலை


===================



இங்கே பலரது

அகராதியில்

வீடு என்கிற

சொல்லுக்கு நேரே

அம்மா என்று

உள்ளது


===================


புகைவண்டியில்

பிதுங்கி வழியும்

பெருங்கூட்டத்தில்

ஊர் போய்ச்சேர

ஒற்றைக்காலில்

நின்றுகொண்டு

எட்டு மணிநேரம்

ஒருவன்

பயணிக்க முடிவதன்

மூன்றெழுத்துக் காரணம்,

அம்மா


===================


அத்தி பூத்தாற்போல

அப்பனும்

மகனும்

பேசிச்சிரித்தால்

விழாத தூசிக்கு

கண்கள் தேய்த்துக்கொண்டே

அப்பால் நகர்கிறார்கள்

அம்மாக்கள்


===================


வெளியூர் செல்லும்

பிள்ளைகளின்

பயணப்பைக்குள்

பிரியங்களைத்

திணித்து வைப்பவர்கள்

இந்த அம்மாக்கள்


===================


பீஸ் கட்ட

பணமென்றால்

பிள்ளைகள்

அம்மாவைத்தான்

நாடுகின்றன

காரணம்,

எப்படியும்

வாங்கிக் கொடுத்துவிடுவாள்

அல்லது

எடுத்துக் கொடுத்துவிட்டு

திட்டு வாங்கிக்கொள்வாள்


===================



அம்மாக்களைப்

பற்றி

எழுதப்பட்ட

எல்லா

கவிதைகளிலும்

குறைந்தபட்சம்

இரண்டு சொட்டுக்கண்ணீர்

ஈரம் உலராமல்


===================


எங்கேனும்

பொது இடங்களிலோ

சுப நிகழ்ச்சிகளிலோ

நாம் சந்திக்கும்

அம்மாக்கள்

ஒன்றைச் சொல்லிக்கொண்டு

தத்தம் வீடுகள் நோக்கி

ஓடுகிறார்கள்

அவர்கள் சொல்வது

இதுதான்

" என் புள்ள

பசி தாங்காது "

19 views0 comments
bottom of page