top of page

அம்மா உன்முன்னே------- அனைத்தும் தோற்குமம்மா!


பத்து மாதங்கள்

------- பரிதவித்த காலங்கள்

பெத்து எடுக்க நீ

------- பிரசவித்த நேரங்கள்


அம்மா உன்முன்னே

------- அனைத்தும் தோற்குமம்மா

சும்மா சொன்னாலும்

------- சொர்க்கமும் ஏற்குமம்மா


வச்சா கைமணக்கும்

------- வறுத்தா நெய்மணக்கும்

பச்சப் பாலகனைப்

------- பார்த்தால் பால் சுரக்கும்


வாரி அணைச்சுக்கிட்டு

------- வழிநெடுக்க நீ பாடும்

ஆரீரோ தாலாட்டு

------- ஆஸ்காரை மிஞ்சுமம்மா



கண்டிப்பில் ஒருசொட்டு

------- கண்ணீர் நான் சிந்தி விட

கண்கெட்ட கல்லென்று

------- கடவுளையும் தண்டிப்பாய்


பள்ளிப் பருவத்தில்

------- பசி தாங்க மாட்டேன்னு

அள்ளிக் கொடுத்துவிட்டு

------- அரைவயிறு நீ உண்பாய்


பொழுது போச்சே என்

------- புள்ள வரலேன்னு

அழுது தீர்த்திடுவாய்

------- ஆறு, குளம் தேடிடுவாய்


காய்ச்சல் வருமேன்னு

------- கசாயம் எனக்கூட்டி

ஓய்ந்தே போனாயே

------- ஒருநாளும் தூங்கலையே


தேய்த்த தைலத்தின்

------- கை வாசம் மாறலையே

சாய்ந்த உன் மடியின்

------- சந்தோசம் தீரலையே


பஞ்சு மெத்தையிலே

------- படுத்தாலும் அன்றுந்தன்

நெஞ்சக் கூட்டுக்குள்

------- நானிருந்த நாள் வருமா?



10 views0 comments
bottom of page